22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி 

0
204
Police vs Bus Conductor Issue
Police vs Bus Conductor Issue

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி

சமீபத்தில் காவல்துறையினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்த நிலையில் தற்போது 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் காவல்துறையை சேர்ந்த ஆறுமுக பாண்டி பயணம் செய்துள்ளார். இவரிடம் பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க கேட்கும்போது நானும் அரசு அதிகாரி தான் பணிக்கு தானே செல்கிறேன் எதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் பேருந்து நடத்துனர் நீங்கள் கட்டாயம் டிக்கெட் எடுத்து ஆக வேண்டும் அதுதான் நல்லது என அவரிடம் பதிலுக்கு வாக்குவாதம் செய்தார்.

பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலானது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த அரசு போக்குவரத்து கழகம் காவல்துறையினரும் டிக்கெட் எடுக்க வேண்டும். அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதியில்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே அவர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என அதற்கு விளக்கம் அளித்து இருந்தனர். அதே போல வாக்குவாதம் செய்த காவல்துறை அதிகாரி ஆறுமுக பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இத்துடன் இந்த விவகாரமானது முற்றுப்பெறும் என்று நினைத்திருந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்துக் கழக போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

நோ பார்க்கிங், போக்குவரத்துக்கு இடையூறாக பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட காரணங்களை கூறி பல்வேறு இடங்களில் சுமார் 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். இது பழிவாங்கும் செயல் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.