அரசு ஊழியர்களுக்கும் இனி அடையாள அட்டை: தமிழக அரசு உத்தரவு

0
125

தனியார் ஊழியர்கள் கழுத்தில் அடையாள அட்டையை அணிவது போன்று அரசு ஊழியர்களும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை கொடுக்கப்பட்ட போதிலும் யாரும் அதனை அணிவதில்லை என்று புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நேரத்தில் அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டது

இந்த நிலையில் தமிழக அரசு செயலாளர் சுவர்ணா இன்று வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் ‘அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும், பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நாளை முதல் தனியார் ஊழியர்கள் போல் அரசு ஊழியர்களும் அடையாள அட்டையை அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது