மக்களுக்காக தான் அரசு என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்! வைகோ பாராட்டு!

0
109

நோய் தொற்று காரணமாக, பெற்றோர்களை இழந்து விட்ட ஆதரவில்லாத குழந்தைகளுக்கு அவர்கள் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயது முடியும்போது அந்த தொகை குழந்தைக்கு வட்டியுடன் கொடுக்கப்படும். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு காப்பகம் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம் போன்ற அனைத்து செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

அத்துடன் இந்த நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடியாக நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் .அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாமல் உறவினர் மற்றும் பாதுகாவலரின் ஆதரவில் இருந்துவரும் குழந்தைகளுக்கு பராமரிப்பு காரணங்களுக்காக மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அது அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். முன்னரே தாய் அல்லது தந்தையை இழந்து தற்சமயம் நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரில் மற்றொருவரை பிறந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கும் இந்த நலத் திட்டங்களால் இந்த குழந்தைகளுக்கும் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் மணிமேகலை காப்பியத்தில் கையில் அமுதசுரபி உடன் காணார், கேளார், போன்ற ஆதரவு இல்லாதவர்களுக்கு அள்ளி வழங்கியதைப் போல தமிழக அரசு அமுதசுரபியாக மாறியிருக்கிறது. மக்களுக்காக தான் அரசு என்பதை நிரூபணம் செய்திருக்கிறது. மனித நேயத்தின் மறுபாதி ஆக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று தெரிவித்திருக்கிறார்.