இன்றுடன் நிறைவு பெறுகிறதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?

0
118

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சென்ற நவம்பர் மாதம் 29ம் தேதி ஆரம்பமானது, ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்ததிலிருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு காரணங்களை தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக தெரிவித்து 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக, நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்க்கட்சிகளை மட்டும் அழைத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தார், ஆனால் இதற்கு அந்த கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை ஆகவே அவருடைய முயற்சி தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், நாளையுடன் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற இருக்கின்ற சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளையும் முடக்கி வருவதன் காரணமாக, நாளைக்கு பதிலாக இன்றுடன் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்து வைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் நவம்பர் மாதம் 29 ம் தேதி ஆரம்பித்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்து நிறைவேற்றம் செய்யப்பட்டதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.