கொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர்

0
524

கொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர்

புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி அன்பு ரஜினி (வயது 35), காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் மீது புதுவை பெரியகடை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், புதுவை மாநில எல்லையையொட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது.

கொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர்

இந்தநிலையில் ரவுடி அன்பு ரஜினி நேற்று இரவு காலாப்பட்டு பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு தனது நண்பர்கள் 4 பேருடன் சென்றார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் காரில் நண்பர்களுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதி, சாலைத்தெரு வீதி சந்திப்பில் அவரது காரை பின்தொடர்ந்து வந்த 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கார் மீது திடீரென 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

உடனே உஷாரான அன்பு ரஜினி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் 4 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். அப்போது அன்பு ரஜினியை சுற்றி வளைத்த அந்த கும்பல் அவருடைய தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செத்தார். அதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரவுடியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக் கொண்டு வரப்பட்டது. அந்த நாய் அங்கு மோப்பம் பிடித்தபடி அருகில் உள்ள பாரதிதாசன் வீதி-சின்னசாமி முதலியார்வீதி சந்திப்பு பகுதிக்கு சென்று நின்றுவிட்டது.

உடனே அந்த பகுதியில் போலீசார் தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு குப்பைத்தொட்டிக்கு அருகே ஆன்லைன் நிறுவனம் மூலமாக உணவு வழங்குபவர்கள் உணவு பொருட்களை எடுத்துச் செல்லும் ஒரு பெரிய பையில் தவிடு வைக்கப்பட்டு வீசப்பட்டு கிடந்ததையும், அதன் அருகிலேயே ரத்தக் கறையுடன் ஒரு கத்தியும் கிடந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர்.

ரவுடி அன்புரஜினியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பிச் சென்ற கொலையாளிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுவையில் கடந்த 6ந்தேதி முன்விரோதத்தில் அரியாங்குப்பம் பகுதியில் ரவுடி பாண்டியன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் குற்றவாளிகள் நேற்று தான் பிடிபட்டனர். இந்த நிலையில் அதற்குள் மீண்டும் ஒரு ரவுடி படுகொலை சம்பவம் நடந்துள்ளது போலீசாருக்கு சவாலாக அமைந்துள்ளது.ஆங்காங்கே அடிக்கடி நடைபெறும் படுகொலை சம்பவங்களால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Previous articleடி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை
Next articleஇரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here