கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!

0
157
#image_title

கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!

தமிழகத்தில் பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்று கொடைக்கானல். இங்கு பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த சுற்றுலா தளத்தினை மையப்படுத்தி அண்மையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இது ஓர் உண்மை கதை என்று கூறப்படும் பட்சத்தில், இப்படம் பெரும் வெற்றியினையும் அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர் பட்டாளம் படையெடுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு அதற்கு முன்னதாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

குணா குகையில் பதற்றம்

குறிப்பாக கொடைக்கானல் குணா குகை சுற்றுலாத்தளத்தில் அதிக கூட்டம் குவிகிறது. இந்நிலையில் நேற்று(மார்ச்.,11)மாலை இப்பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து விஜய்(24), பாரத்(24) மற்றும் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார்(24) உள்ளிட்ட 3 இளைஞர்கள் குணா குகைக்கு வந்துள்ளனர். இவர்கள் மூவரும் வனத்துறை அதிகாரிகள் மூலம் போடப்பட்டுள்ள தடுப்பு வேலியை தாண்டி அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். இது குறித்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பதற்றம் நிலவியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து ஆபத்து நிறைந்த இப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை தற்போது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.