பசியாற்றும் வைக்கத்தப்பன் திருக்கோவில்!

0
86

கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் வைக்கம் நகரில் அமைந்திருக்கிறது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. பகலிலும் இரவிலும் நடை சாத்தப்படும் போது அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசலிலும் வந்து யாரும் பசியுடன் இருக்கிறீர்களா ?என்று கேட்டுவிட்டு நடை சாத்தும் வழக்கம் தான் அது.

கரண் என்னும் அசுரன், முக்தி அடைய வேண்டும் என்பதற்காக கடுமையான தவமிருந்தான். அவன் சிறந்த சிவ பக்தனும் கூட, ஆகவே அவன் முன்பாக தோன்றிய சிவபெருமான் அவனிடம் 3 சிவலங்கங்களை கொடுத்து, இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தியடையலாம் என்று தெரிவித்தார்.

அதாவது அந்த அசுரனை பின்தொடர்ந்து செல்லும்படி புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் சிவபெருமான் அனுப்பி வைத்தார்.

சிவபெருமான் கொடுத்த 3 சிவலிங்கங்களில் ஒன்றை வலது கையிலும், மற்றொன்றை இடது கையிலும், 3வது சிவலிங்கத்தை தன்னுடைய வாயிலும் எடுத்துக்கொண்டு தன்னுடைய பயணத்தை தொடர்ந்தான் அந்த அசுரன்.

சிறப்பான இடத்தை தேர்வு செய்து அதில் சிவலிங்கங்களை நிறுவ நினைத்த அந்த அசுரன் தன்னுடைய பயணத்தின் போது களைப்பை உணர்ந்தான். ஆகவே சற்று ஓய்வெடுக்க நினைத்த அந்த அசுரன் தன்னுடைய வலது கையிலிருந்து சிவலிங்கத்தை ஒரு இடத்தில் வைத்தான். சற்று நேரத்திற்கு பிறகு கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயற்சி செய்தபோது எடுக்க முடியாமல் போனது.

அந்த சிவலிங்கம் அதே இடத்தில் நிலை பெற்று விட்டதை உணர்ந்து கொண்ட அந்த அசுரன் அங்கு வந்த புலிக்கால் முனிவரிடம் அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபடுமாறு கேட்டுக் கொண்டான். அதன் பேரில் அந்த முனிவரும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தபடி அங்கேயே தங்கி விட்டார்.

அதன் பிறகு அந்த அசுரன் அங்கிருந்து புறப்பட்டு ஏற்றமானூர் என்ற இடத்தில் தன்னுடைய இடது கையிலிருந்த சிவலிங்கத்தையும், அடி கடித்திருத்தி என்ற இடத்தில் தன்னுடைய வாயிலிருந்த சிவலிங்கத்தையும் நிறுவி வழிபட்டான். அதன் பலனாக அவனுக்கு முக்தி கிடைத்தது.

பிற்காலத்தில் பரசுராமர் வான் வழியில் வடதுசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது ஊரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழம் நிறத்தில் ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் காணப்பட்டது.

அங்கு இறங்கிய பரசுராமர் அந்த சிவலிங்கத்திற்கு பீடம் ஒன்றை அமைத்து அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தார். அந்த சிவலிங்கம் கரண் என்ற அசுரனால் வலது கையிலெடுத்து வரப்பட்டு வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்பது தெரிய வந்தது. அதுவே வைக்கம் மகாதேவர் அருளும் ஆலய இறைவன் என்று பார்க்கவ புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தின் கருவறையில் 2 அடி உயர பீடத்தின் மீது 4 அடி உயரத்தில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கிய நிலையில் சிவபெருமான் மீட்டெடுக்கிறார் மூலவரான இவருக்கு மகாதேவர் என்று பெயர்.

வியாக்ரபாதர் வழிபட்ட காரணத்தால் வியக்ரபுரீஸ்வரர் என்ற பெயருமுண்டு. ஆனால் பக்தர்கள் எல்லோரும் இவரை ஊரின் பெயரை கொண்டு வைக்கத்தப்பன் என்று அழைக்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு தனியாக சன்னதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால் அம்மனை வழிபட்ட பலன் கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் பகல் மற்றும் இரவு சமயங்களில் நடை சாத்தப்படும் போது கோவில் அர்ச்சகர் ஒருவர் ஆலயத்தின் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கிறீர்களா? என்று கேட்கும் பழக்கம் உள்ளது.

அப்படி கேட்கும் போது யாராவது பசியாக இருக்கிறேன் என்று தெரிவித்தால் அவரை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவு வழங்கி அதன் பிறகு தான் கோவில் நடை சாத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. இதனை சிவபெருமானின் கட்டளையாகவே இன்றளவும் இந்த ஆலயத்தில் பின்பற்றுகிறார்கள்.