அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!!

0
194
#image_title

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அத்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியமே பெண்கள் மாயமாக காரணம் என புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை 48 காலனி பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது குழந்தைகள் காப்பகம். இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் என 42 குழந்தைகள் இங்கு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இரு வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும், திருவேகம்புத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் இங்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த இரு குழந்தைகளும் காப்பகத்திலிருந்து திடிரென காணாமல்போயுள்ளனர். இதனை தொடர்ந்து இரு குழந்தைகள் காணாமல்போனதாக காப்பகத்தின் பொருப்பாளர் ஜெயா சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த காப்பகத்தில் பணிபுரியும் இரவு காவலர் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் என்பதால் இரவு நேர பணிக்கு முறையாக வருவதில்லை என்றும் இங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களும் முறையாக இயங்குவதில்லை.

இவற்றை கண்காணிக்கும் அதிகாரிகள் அலட்சிய போக்கில் செயல்பட்டு வருவதாகவும் இந்த காப்பகம் முறையான பாதுகாப்பு இன்றியே செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இந்த காப்பகத்தில் இருக்கிற பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.