வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய 5 செடிகள்!

0
1051

ஒருவர் சொந்தமாக வீடு கட்டினால் முதலில் அவர்களுக்கு நினைவு வருவது வீட்டை அலங்கரிக்க செடிகளை வைக்கலாம் என்பதே. சின்ன இடமாக இருந்தாலும் சரி, பெரிய இடமாக இருந்தாலும் சரி செடிகளை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அப்படி நாம் வளர்க்கக்கூடிய செடிகள் நமக்கு நேர்மறையான எண்ணங்களை தரவேண்டும். அதுபோல நாம் தேர்வு செய்து செடிகளை வளர்க்க வேண்டும்.

இப்பொழுது நாம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 செடிகள் என்னவென்று பார்ப்போம்.

1. சங்குப்பூ

சிவபெருமானுக்கு உரிய சங்கு பூவை கட்டாயம் வளர்க்க வேண்டும். வெளியில் வாங்கி கடவுளுக்கு போடுவதைவிட நாம் வீட்டில் வைத்து இருக்கும் செடிகளில் இருந்து பறித்து கடவுளுக்குப் படைப்பது மனநிம்மதியை தரும். இந்த சங்கு பூவானது இரண்டு நிறத்தில் இருக்கும் வெள்ளை நிறம் மற்றும் நீல நிறம். நீல நிற சங்குப்பூ ஆனது சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இதனை நீங்கள் வீட்டு முற்றத்தில் வைக்கும் பொழுது வீட்டிற்கு அழகையும் சேர்க்கும். இதனை நீங்கள் விநாயகருக்கும் போடலாம்.

2. துளசி செடி:

அடுத்தது ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான இடத்தை பெறுவது துளசிச் செடி. துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி கடாக்ஷம் அதிகமாக இருக்கும் என்பது பொருள்.மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும். எந்த இடத்தில் மகாலட்சுமி இருக்கிறாரோ அந்த இடத்தில் மகாவிஷ்ணு இருப்பதாக பொருள். அதனால் அப்பார்ட்மெண்ட் போன்ற எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு சிறிய தொட்டியில் துளசிச் செடியை வளர்ப்பது மிக மிக நல்லது.

3. தொட்டால் சிணுங்கி:

துளசி இலையுடன் சேர்த்து தொட்டால் சிணுங்கி செடியை நாம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். தொட்டால் சிணுங்கி செடியை நாம் வளர்ப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள் நமக்கு தோன்றும் என சொல்லப்படுகிறது.மேலும் துளசிச் செடி மற்றும் தொட்டால் சிணுங்கி இலையை சேர்த்து வைக்கும் பொழுது லட்சுமியும் மஹாவிஷ்ணுவும் வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம்.

4. கற்றாழை:

அடுத்து நாம் கண்டிப்பாக கற்றாழைச் செடியை வளர்க்க வேண்டும். வீட்டில் எந்த ஒரு தீங்கும் வராமல் நம்மை பாதுகாப்பது கற்றாழைச் செடி. நமக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டியை போக்க கூடியது கற்றாழை செடி. நாம் கற்றாழைச் செடியைக் காய விடக்கூடாது. ஏனென்றால் கற்றாழை செடியானது எவ்வளவு நன்கு செழிப்புடன் வளர்கிறதோ அவ்வளவும் நமது வீட்டில் நல்ல காரியங்களும், நல்ல சுப காரியங்களும் நிகழும் என்பது பொருள். எனவே கற்றாழை செடியை நன்கு பாதுகாப்பாக தனியாக ஒரு தொட்டியில் வைத்து வளர்க்க வேண்டும்.

5. செம்பருத்திச் செடி:

அதிகமாக பெண்களால் விரும்பப்படுவது இந்த செம்பருத்தி செடி. பெண்களுக்கு உள்ள கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய தன்மை இந்த செடிக்கு உண்டு. செம்பருத்தி பூ, இலை அனைத்துமே கூந்தல் பிரச்சனைகளுக்கு பயன்படும். செம்பருத்தி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் செவ்வாய் தோஷத்தால் வரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்காது. அதேபோல் செவ்வாய் தோஷம் உடையவர்கள் இந்த செம்பருத்தி செடியை வாங்கி வளர்த்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.

இந்த ஐந்து செடிகளும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். மற்ற பூச்செடிகள், மணி பிளான்ட், காய்கறிச் செடிகள் ஆகியவை அவரவர் விருப்பத்தை பொருத்தது. ஆனால் இந்த 5 செடிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.