Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சர் தொடங்கியுள்ள புதிய திட்டம்! நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் ஆளுநர் பாராட்டு!

முதலமைச்சர் தொடங்கியுள்ள புதிய திட்டம்! நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் ஆளுநர் பாராட்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கியுள்ள காலை உணவு திட்டமானது நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி பேசியுள்ளார்.

2023- ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தமிழக கவர்னர் ஆர். என். ரவி உரை முழுவதும் தமிழில் பேசி தொடங்கி வைத்தார்.

அதில் அவர் தமிழகம் கடந்த 50 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. கர்நாடக ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காலங்களில் நிலைமையை சரியான முறையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கையாண்டுள்ளார் என பாராட்டி பேசியுள்ளார்.

இதையடுத்து பேசிய அவர் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக பல்வேறு ஆபரேஷன் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு செயல்பாடுகளில் நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு,  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. அதற்கு வாழ்த்துக்கள் நன்றி. மேலும் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், மாநிலத்திற்கு எதிராகவும் உள்ள நீட் தேர்வு விலக்குகாக தமிழ்நாடு அரசு போராடி வருகிறது. அதற்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.

நீதிக்கட்சி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சத்துணவு திட்டம் பல்வேறு பரிமாணங்களை பெற்று வளர்ந்துள்ளது. தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள காலை உணவு திட்டம் நாட்டிற்க்கே முன்மாதிரி திட்டமாக அமைந்துள்ளது அதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். என தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை குறித்து பாராட்டி பேசிய ஆளுநர் இறுதியில் வாழிய தமிழ்நாடு! வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! என தனது உரையை முடித்தார்.

 

 

Exit mobile version