அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர்! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

0
119

ஏழை, எளிய மாணவர்களிடம் பெரிதாக செலவு செய்வதற்கு பணம், காசு, இருக்காது ஆனால் அவர்களிடம் அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். அதோடு அவ்வாறு ஏழை-எளிய மாணவர்களாக இருப்பவர்கள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அரசுப் படிக்கும் ஏழை, எளிய, மாணவர்கள் தான் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் முதலிடத்தை பிடிப்பார்கள்.

ஆனால் என்னதான் அவர்கள் நன்றாக படித்தாலும் கூட அவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கான வசதி இல்லாத காரணத்தால், பல மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆகிக்கொண்டே செல்லும்.

இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கின்ற ஆனல் மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சன்னாசி இவருடைய மனைவி மயில் தாய் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுடைய மகள் தங்க பேச்சி இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் என்று சொல்லப்படுகிறது.

இவர் கடந்த முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அரசு இட ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பெற்றோர் கூலி வேலை செய்து வருவதால் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருக்கிறது.

ஆகவே மாணவி தங்க பேச்சு தோட்ட வேலை மற்றும் பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டே அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து படித்து மறுபடியும் நீட் தேர்வு எழுதினார். இதில் 256 மதிப்பெண் வாங்கிய மாணவிக்கு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்தது.

கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது, அதே சமயத்தில் கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றிருக்கிறது. மாணவி தங்கப்பேச்சி மிக விரைவில் மருத்துவக் கல்லூரிக்கு செல்லவிருக்கிறார்.

விவசாய பணியை செய்து கொண்டே படித்து மருத்துவ கல்லூரிக்கு செல்லவிருக்கின்ற மாணவி தங்கப்பேச்சியை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் நேற்று அவருடைய இல்லம் தேடி சென்று சந்தித்து பாராட்டியிருக்கிறார்.

மாணவிக்கு வெள்ளைநிற கோட், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டியிருக்கிறார்.

அத்தோடு மாணவியின் பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மருத்துவராகிய பிறகு ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், பல அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும் எனவும், தங்கப்பேசிக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அதன்பிறகு அங்கிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் புறப்பட்டுச் சென்றார்.