மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் 5 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் 5 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஊரடங்கு தளர்வுகள் காரணமாக நாளை முதல் சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திலிருந்து நாக்பூர், புனே, கோண்டியா, சோலாப்பூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் நாக்பூர் இடையே துரந்தோ சிறப்பு சிறப்பு ரயிலும் மற்ற ரயில் நிலையங்களுக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்களும் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முடியும்.
மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.