Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BREAKING எல்.கே.சுதீஷுக்கு என்ன ஆச்சு? அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று உச்சகட்ட பாதிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பொதுமக்களிடையே தீவிரமாக பரவி வந்த தொற்று, தற்போது தேர்தல் களத்தில் தன்னுடைய வேட்டையை ஆரம்பித்துள்ளது அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, வாக்கு சேகரிப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.  இதுபோன்ற சமயங்களில் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 20ம் தேதி அன்று தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எல்.கே.சுதீஷுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அங்கு அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சித்த மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.

தேர்தல் பரப்புரை திட்டங்களை எல்லாம் ரத்து செய்விட்டு ஓய்வில் இருந்த எல்.கே.சுதீஷ் திடீரென சற்று நேரத்திற்கு முன்பு கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கொரோனா தொற்று குறையாததால், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளது.

Exit mobile version