ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் – திமுக கிளை செயலாளர் கைது

0
93

திருப்பத்தூரில் ஆந்திராவிற்கு  ரேஷன் அரிசியை கடத்த முயன்ற திமுக கிளை செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை அடுத்த ஆம்பல் நகர் பகுதியானது  தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் எப்போதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்றை மறைத்து பிடித்து காவல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நடைபெற்ற சோதனையில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில்,

இந்த மினி வேனானது  பாரதி நகர் பகுதியில் வசித்து வரும் திமுக  கிளை  செயலாளரான வேலு  என்ற நபருக்கு சொந்தமானது என்று தெரியவந்ததையடுத்து வேலுவும்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் ஆந்திராவிற்கு தொடர்ந்து இதுபோன்ற ரேஷன் அரிசி, ரேஷன் பொருட்கள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே அதற்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.