2 வருடங்களுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக. ஆனால், இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை.
அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள். மேலும், 3 நாட்களுக்கு முன்பு அவசரமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசித்தார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.
மேலும், டெல்லியில் நடந்த அமித்ஷா – பழனிச்சாமி சந்திப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்றே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறர்கள். ஆனால், அமித்ஷா உடனான சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி வேறு மாதிரி விளக்களித்தார்.
மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்திருக்கிறார். கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி சொல்வது பொய்.. பாஜகவுடன் வேறென்ன பேசியிருக்க போகிறார்கள்? என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி ‘நான் அமித்ஷாவை சந்தித்தது பற்றியே கடந்த 3 நாட்களாக திமுகவினர் பேசி வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக சட்டசபையிலும் இதையே பேசுகிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. நான் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசியதால் உதயநிதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது’ என நக்கலடித்தார்.