Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!

Even after the election, the trial will continue

Even after the election, the trial will continue

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!

 தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்த இந்த தேர்தலில் தமிழகம் முழுவதிலும் சுமார் 69.46% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் முயற்சி செய்தது. 

இதுதவிர பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுத்து மிகவும் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிகப்பட்டன. இதற்கான பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனை போன்ற தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியதாவது, “தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இருந்து கலைக்கிறோம். 

ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தல் முடியும் வரை அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் இருக்கும். பறக்கும்படை கலைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்தை விதிகள் அப்படியே தான் உள்ளன. 

அதன்படி, பொதுமக்கள் கையில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட தொகையின் உச்சவரம்பு 50 ஆயிரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், ஒருவேளை மறுவாக்குப்பதிவு இருந்தால் அதுவரை வீடியோ குழுக்களின் கண்காணிப்பு இருக்கும்” என அதிரடியாக அறிவித்துள்ளார். 

Exit mobile version