Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் அணி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் அணி செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இதனால் அதிமுகவில் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர், இரட்டை இலை முடங்கி விடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற உழைப்போம் என்றும் தெரிவித்தனர். இன்று காலை அதிமுக சார்பில் தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு பாஜக தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பொதுநலன் கருதி, கூட்டணி நன்மை கருதி தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும் ‘திமுக அரசை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும் நாம் அனைவரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் பாஜக தொண்டர்கள் வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version