நாட்டாண்மை இருந்தால் தீர்ப்பை தான் மாத்தி சொல்லுவார்!! ஆனால் இல்லாமல் போனதால் திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பவம்!!
தாலி எடுத்துக் கொடுக்க நாட்டாண்மை இல்லாத காரணத்தால் திருமணம் நின்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ளது வெள்ளைக்கல் என்ற மலைகிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சேகர் என்ற சங்கர் நாட்டாண்மையாக உள்ளார். ஊரில் எந்த ஒரு நல்ல காரியமும் இவர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இவரது அண்ணனின் மகன் திருமணம் நேற்று முன்தினம் அவர்கள் மலைகிராமத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு தேவையான தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்க சங்கர் தனது குடும்பத்தினருடன் கடந்த 5-ஆம் தேதி மைசூர் சென்றார்.
அங்கு உள்ள சிவனாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த போலீசார் சங்கரை மடக்கி விசாரணைக்கு அரியூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று அவர்மீது சாராயம், விற்றதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவரது மலைகிராம மக்கள் நாட்டாண்மை தான் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும், எனவே சங்கரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் விடுதலை செய்யவில்லை.
அடுத்து அத்தியூர் ஊராட்சி தலைவரும், வெள்ளைக்கல் மலை கிராம மக்களும், நாட்டாண்மையை திருமணத்திற்கு ஜாமீனில் அழைத்து வர முயற்சி செய்தனர். ஆனால் சனி,ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதன் காரணமாக வெள்ளைக்கல் மலைகிராம வழக்கப்படி தாலி எடுத்துக் கொடுக்க நாட்டாண்மை இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் உறவினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.