இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டிடலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை நீடிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,வாக்காளர் பட்டிடலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக, அந்த விவரங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று வருகிறோம்.
அந்த வகையில் கடந்த மார்ச் 31-ந் தேதிவரை மொத்தமுள்ள 6.20 கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இது 68.75 சதவீதமாகும்.
அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 99 சதவீதம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 93.91 சதவீதம், நாகை மாவட்டத்தில் 87.49 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டன.
குறைந்தபட்சமாக சென்னையில் 32.26 சதவீதம், கோவை மாவட்டத்தில் 48.34 சதவீதம், செங்கல்பட்டு மாவட்டத்தில்53.50 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.