நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!
பொதுவாக நெஞ்செலும்பு சூப் உடலின் பலத்தை அதிகரிக்க குடிப்பார்கள். ஆட்டின் எலும்பிலுள்ள கால்சியம் சத்து நம்முடைய எலும்பின் பலத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
இந்த எலும்பு சூப் உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
2. பட்டை
3. கிராம்பு
4. சோம்பு 1/2 தேக்கரண்டி
5. பிரியாணி இலை
6. ஆட்டு நெஞ்சு எலும்பு 250 கிராம்.
7. பூண்டு
8. வெங்காயம்
9. தக்காளி
10. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
11. கல் உப்பு
12. கொத்துமல்லி இலை
மசாலா தூள் தயாரிக்க:
1. சீரகம் ஒரு தேக்கரண்டி
2. மிளகு ஒரு தேக்கரண்டி
3. கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி.
மிக்ஸியில் சீரகம் மிளகு கொத்தமல்லி விதை ஆகியவை சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும் .
செய்முறை:
1.முதலில் தோல் உரிக்காத பூண்டை எடுத்து இடித்து கொள்ளவும்.
2. இதனுடன் 15 சின்ன வெங்காயத்தையும் ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.
3.குக்கரை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு,பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
4. அதில் நெஞ்சு எலும்பை போட்டு வதக்கவும்.
5. ஒரு நிமிடம் வதக்கிய பின் அதில் தட்டி வைத்த பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
6. பிறகு தக்காளி 1 பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.
7. அதில் மஞ்சள் தூள் அரைத்து வைத்த மசாலா தூள்,உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
8. அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை விடவும்.
9. இப்பொழுது குக்கரை திறந்தால் சுவையான ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் தயார். கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை தூவி சூடாகப் பரிமாறுங்கள்.
இந்த முறையை பயன்படுத்தி நெஞ்செலும்பு சூப் செய்யும் பொழுது தினம் தினம் சுவைக்கத் தூண்டும்.