Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

24 ஆயிரம் கடிதங்களை டெலிவரி செய்யாமல் வீட்டிலேயே வைத்து கொண்ட தபால்காரர்: அதிர்ச்சி தகவல்

ஜப்பான் நாட்டில் தங்களுக்கு வரவேண்டிய கடிதங்கள் வரவில்லை என பலர் புகார் கொடுத்த நிலையில் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த தபால்காரர் ஒருவரது வீட்டில் ஜப்பான் போலீசார் திடீரென சோதனையிட்டனர். இந்த சோதனையில் அவரது வீட்டில் சுமார் 24 ஆயிரம் கடிதங்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இன்னும் பல கடிதங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ’வீடுகளைத் தேடி கண்டுபிடித்து கடிதங்களை டெலிவரி செய்ய சிரமமாக இருந்ததாகவும் அதனால் அப்படிப்பட்ட கடிதங்களை வீட்டிலேயே குவித்து வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். கடிதங்களை டெலிவரி செய்ய முடியவில்லை என்று தபால் அலுவலகத்தில் திருப்பிக் கொடுத்தால் தன்னை பணிபுரிய தகுதியற்றவன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதால் அந்த கடிதங்களை வீட்டிலேயே வைத்துக் கொண்டதாக போலீசாரின் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. இதனை அடுத்து ஜப்பான் தபால் நிலையம் தபால்கள் கிடைக்காத வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வருகிறது.

Exit mobile version