கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்து! அந்த பகுதியை சூழ்ந்த கரும் புகை!
தெற்கு கலிபோர்னியா பகுதியில் நேற்று ஒரு சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது இரண்டு பேர் பலியாகினர். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். இரண்டு வீடுகள் மற்றும் ஒரு லாரி உட்பட பல வாகனங்கள் தீயினால் எரிந்து கருகின என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த சிறிய விமானம் சான் டியாகோ நகரில் வடகிழக்கில் சுமார் 20 மைல்கள் புறநகர்ப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தீயணைப்பு படையில் துணைத் தலைமை அதிகாரி கூறும்போது, சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த விமானம் இரட்டை எஞ்சின் கொண்ட செஸ்னா சி 340 ரக விமானம் என்றும் எங்கு சென்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். விபத்து நடந்த நகரப்பகுதியில் உள்ள சாண்டானா பள்ளியின் மிக அருகேயே இந்த விபத்து நடந்துள்ளது. ஆனாலும் பள்ளியில் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததன் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
பள்ளி நிர்வாகமும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விமான விபத்து குறித்து விசாரிக்கும் என்றும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.