Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இப்போ  மட்டும் ‘வெற்றி வேல் வீரவேல்’ ஏன்… சுஹாசினியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

இப்போ  மட்டும் ‘வெற்றி வேல் வீரவேல்’ ஏன்… சுஹாசினியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி தன் மேடைப் பேச்சுகளால் அதிகளவில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் பணிகளுக்காக ஐதராபாத்தில் படக்குழு சென்ற போது இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி பேசியது தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது. ஐதராபாத்தில் அவர் பேசிய போது “பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் படமாக இருந்தாலும், அது உங்களின் படம்தான். ஏனென்றால் தமிழகத்தில் 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் நடந்தது. ஆனால் அதிகளவில் ஐதராபாத்திலும் ராஜமுந்திரியிலும்தான் நடந்தது. அதனால் இது உங்களின் படம்தான்” எனப் பேசி இருந்தார்.

அப்போதே சுஹாசினியின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் சுஹாசினியின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்வினையாக ட்ரோல்களையும் மீம்களையும் பகிர்ந்தனர். ஒரு படத்தின் வியாபாரத்துக்காக இப்படியெல்லாம் பேசுவதா என்ற கேள்விகளை எழுப்பினர்.

இப்போது படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் குழுவினர் சென்னையில் படம் பார்த்து அது சம்மந்தமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோவில் அனைவரும் “வெற்றிவேல் வீரவேல்” என கோஷமிட்டனர். அதில் சுஹாசினியும் வெற்றி வேல் வீரவேல் என கத்தினார்.

இந்த வீடியோ இப்போது கவனத்தைப் பெற்றுள்ள நிலையில் சுஹாசினியை மட்டும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முன்னர் அவர் பேசியதையும் இப்போது அவர் இப்படி நடந்து கொண்டு இருப்பதையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version