ரோகிணி திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்
கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் பத்து தல என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இந்த படத்தை காண்பதற்காக இன்று காலை 15 க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்பொழுது டிக்கெட்டை பரிசோதனை செய்யக்கூடிய ஊழியர்கள் டிக்கெட் இருந்தும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனைத்தொடர்ந்து திரைப்படம் யூ.ஏ சான்றிதழ் என்பதால் சிறுவர்கள் அனுமதிக்க மறுத்ததாகவும், பின்னர் அதே நரிகுறவ மக்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு படம் பார்க்க வைக்கப்பட்டதாகவும் ரோகினி திரையரங்கம் அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில் சி.எம்.பி.டி போலீசார் ரோகினி திரையரங்கிற்கு நேரில் சென்று திரையரங்கு உரிமையாளர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நரிகுறவ மக்கள் மேம்பாலத்தின் கீழ் வசித்து வருவதும், சிம்பு ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நரிகுறவ மக்களுக்கு டிக்கெட்டை இலவசமாக வழங்கியதும், டிக்கெட் பரிசோதகர் குமரேசன், சிறுவர்கள் இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அமைந்தகரை வட்டாட்சியர் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தி சென்றார்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட காவேரி என்பவர் அளித்த புகாரின் பேரில், ரோகினி திரையரங்கின் கேஷியர் கோயம்பேட்டை சேர்ந்த ராமலிங்கம்(50) மற்றும் பணியாளர் குமரேசன்(36) ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோதமாக கூடுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சி.எம்.பி.டி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் இந்த வழக்கை விசாரணை மேற்கொள்ளவும் உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.