Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது:

வட இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தற்போது விலகி வருவதால் அப்பகுதிகளில் மழை குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி 28ஆம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது குறைந்துவிடும்.மேலும் வங்கக்கடலில் தற்போது மேற்கு திசை காற்று வீசுவது குறைந்து கிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால்,தமிழகத்தில் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்றும்,தமிழகத்தில் 28ஆம் தேதியன்றே கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் இதன் தொடர்ச்சியாக வருகின்ற 29ஆம் தேதியன்று மத்திய வங்கக் கடலின் கிழக்குப் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கன்னியாகுமரி,சிவகங்கை, இராமநாதபுரம்,திருவள்ளூர், நாகப்பட்டினம்,தஞ்சாவூர், திண்டுக்கல்,புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும்,
தூத்துக்குடி,தென்காசி, விருதுநகர்,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version