Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் – 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் – 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி

புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சுமார் 300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான உதவிகளையும் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பல நாடுகளை சேர்ந்த பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இருப்பினும் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் செய்யும் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது இந்திய பொருளாதாரத்தில் அத்தியாவசியமாகிறது.

அந்த வகையில் புதியதாக தொழில் துவங்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு உதவுவதாகவும் அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்தத் திட்டத்தின்படி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுதல் தொழில் வழிகாட்டுதல் மற்றும் சந்தையை அணுகுவது குறித்து உதவி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் 100 யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியுள்ளதாவது, நிறுவனங்கள் தங்களுடைய ஐடியாவில் இருந்து அதை ஒரு உற்பத்திப் பொருளாக மாற்றுவதில் உள்ள தேவைகளை புரிந்து கொண்டுள்ளோம்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதிப் பற்றாக்குறை என்பது ஒரு பெரிய பிரச்சனை அல்ல.ஐடியாவை தொழிலாக மாற்றுவது, இதற்குத் தேவையான திறன்களை கொண்ட நபர்களை தேடுவது உள்ளிட்டவைகளே தற்போதைய பிரச்சனை என்றும் அவர் கூறியுள்ளார்.அதற்காக இந்த திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த SAMRIDH திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூபாய் 40 லட்சம் வரை நிதி உதவி வழங்கப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version