அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்…கலர் மாறிய கடல்..!!!

0
148

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் ‘பூங்கோரை’ எனப்படும் ஒருவகை பாசியால் கடல் நீரின் நிறம் நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறிவிட்டது. இந்த திடீர் நிற மாற்றத்தின் காரணமாக சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் எதுவும் நேரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரின் மூலம் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கின. இதையடுத்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரை ஆய்வு செய்தனர்.பின்னர் இதுகுறித்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,

“பொதுவாக மன்னார் வளைகுடா கடற்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். இதனை மீனவர்கள் ‘பூங்கோரை’ என்று அழைப்பார்கள். இந்த பாசிகள் கடலில் அதிக பரப்பளவில் படரும்போது கடல் நீர் நீல நிறத்திலிருந்து மாறி பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.

அப்போது கடல் நீரோட்டம், கடல் அலை, சூறைக்காற்று, போன்றவற்றின் காரணமாக இவை கடலின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்றுவிடுவதால் பெரும்பாலும் மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த பாசிகள் படர்ந்தபோது, பாறைகளில் வசிக்கக் கூடிய மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது.

அனால்,இந்த ஆண்டு தற்போதுவரை அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை.அதேசமயம் இது விஷத்தன்மை உடைய பாசி கிடையாது. மேலும், இந்த பாசியால் பாதிக்கப்பட்டு மூச்சடைப்பால் இறந்த மீன்களை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு அதன் பின்னர் சாப்பிடலாம்,இதனை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது .

இன்னும் ஒரு சில வாரங்களில் கடலும்.கடல் நீரின் நிறமும் இயல்பு நிலைக்கு வந்துவிடும். எனவே மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.