Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக ஆட்சியை சிக்கலில் தள்ளிய சம்பவங்கள்: சட்டசபை நடக்கும் போதே தமிழகம் முழுக்க பகீர்!

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலைகள் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்ததாக புள்ளிவிவரங்களை கொண்டு விளக்கம் அளித்தார். 2012ல் 1,943 கொலைகள், 2013ல் 1,927 கொலைகள் நடந்துள்ளன. கொரோனா காலத்திலும், 2020ல் 1,661 கொலைகள் பதிவாகியுள்ளன. 2024ல் 1,540 கொலைகள் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பே, மாநிலம் முழுவதும் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஓசூரில் 12ம் தேதி முதியவர் தம்பதி கொலை செய்யப்பட்டனர். 13ம் தேதி அவிநாசியில் மற்றொரு தம்பதி கொல்லப்பட்டனர். 15ம் தேதி ஈரோட்டில் முக்கிய பிரமுகர் கொல்லப்பட்டார். 16ம் தேதி கரூரில் ரவுடி சந்தோஷ்குமார், 18ம் தேதி திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹிர் உசேன், 19ம் தேதி ஈரோட்டில் ரவுடி ஜான், 21ம் தேதி காரைக்குடியில் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய கொலைகளில், நீதிமன்றம், காவல் நிலையங்களுக்கு செல்லும் வழியிலேயே குற்றவாளிகள் வெட்டிக்கொல்லப்படுவது கவலைக்கிடமான அம்சமாக உள்ளது. தமிழகத்தில் உயர் பதவிகளை அரசியல் காரணங்களால் வழங்கியதன் விளைவாக, முக்கிய அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பது, சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. எதிர்வரும் 2026 தேர்தலில், இந்த பிரச்சனை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக்கு பெரும் தலைவிதையாக அமையலாம்.

Exit mobile version