Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க அளவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமைக்க அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி செய்தன

முதல் கட்டமாக பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து சிவசேனா கட்சி தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை

இந்த நிலையில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் தனித்தனியாக அழைப்பு விடுத்தார். மூன்று கட்சிகளுக்கும் கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்க மறுத்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என உச்சநீதிமன்ற பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்

இதுமட்டுமன்றி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சிவசேனா மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வழங்கும் உத்தரவால் மகாராஷ்டிர மாநிலத்தில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Exit mobile version