முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

0
123

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலரும் அவதிப்படுவது முடிஉதிர்வு பிரச்சனை.அதற்காக பல்வேறு செலவுகள் செய்து ஷாம்புகள் கண்டீஷ்னர் என விதவிதமான பொருட்களை பயன்படுத்தியும் மாற்றம் எதுவும் இருக்காது. இயற்கை முறையில் முடியை பராமரிக்க சில வழிமுறைகள் பார்ப்போம்.

1. விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்கும் வழி இது.

2.கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

3.தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளும் வழக்கம் இருப்பவர் கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

4. தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது அரிசி கஞ்சி விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

5.தலை முடிக்கு மென்மை தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.