Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியானது சூர்யா- பாலா இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு… மாஸ் லுக்கில் சூர்யா!

சூர்யா பாலா இணைந்துள்ள படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க, பாலசுபர்மண்யம் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்றொரு முக்கியமான வேடத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கன்னியாகுமரியில் இதுவரை 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வணங்கான்’ என்ற தலைப்போடு சூர்யாவின் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை வெளியிட்டுள்ள சூர்யா “உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி.. பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா அண்ணா” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version