வாக்காள பெருமக்களே! உங்களுடைய வசதிக்காக அரசு செய்திருக்கும் அசத்தல் ஏற்பாடு பற்றி தெரியுமா?

0
127
voting

தேர்தலை எப்போதும் ஜனநாயக திருவிழா என அழைப்பது வழக்கம். ஆனால் அரசோ இந்த முறை அதனை உண்மையாக்கும் வகையில் வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் வசதி செய்து கொடுத்து அசத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவி வருவதால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை கண்ணும் கருத்துமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால் தான் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு, வாக்காளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

SPL-Bus

தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் தமிழக அரசு தன் பங்கிற்கு ஓட்டு போட ஊருக்கு செல்லும் வாக்காள பெருமக்களுக்காக சிறப்பு பேருந்துக்களை அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மொத்தம் 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகளோடு சேர்த்த், 14 ஆயிரத்து 2154 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசல், கடைசி நேர பயண அவசரங்களை தடுப்பதற்காக ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை காலங்களைப் போலவே தேர்தலை முன்னிட்டும் சென்னையின் 5 இடங்களில் இருந்துபேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு, மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூர் செல்ல உள்ள வாக்காளர்களுக்கு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்தும் 2 ஆயிரத்து 644 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி வேலை பார்ப்பவர்கள் ஏராளம். வாக்குப்பதிவிற்கு பெரும்பாலான நிறுவனங்கள் ஒருநாள் மட்டுமே விடுமுறை அளிக்கும் என்பதால் பலரும் பேருந்து மற்றும் ரயில் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இதனால் ஏராளமானோர் வாக்களிக்க செல்லவது கிடையாது. ஆனால் இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்களிக்க வேண்டும் என்ற ஆவலுடன் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோரை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.