கவரிங் நாணயத்தை கொடுத்து ஓட்டு வாங்கிய வேட்பாளர்

0
187
Representative purpose only

பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றது. அப்போது நடந்த வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி ஒன்றாவது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்ததாக தெரியவருகிறது.

வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு அந்த நாணயத்தை அடகு வைக்க சென்றபோது, அந்த நாணயம் பித்தளை என தெரிய வந்ததும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த தங்க நாணயத்தை வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்பு கொடுத்தால் போலி என தெரிந்துவிடும் என்பதால் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்களை அழைத்து அவர்கள் கைகளில் மறைவாக தங்க நாணயம் என கூறி பித்தளையை கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், வேறு ஒருவருக்கு வாக்களிக்கும் மனநிலையில் வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்கள் கூட குறிப்பிட்ட அந்த கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட்டதாகவும், இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊராட்சியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ஓட்டு என்பது பொது மக்களின் ஜனநாயக கடமை. தகுந்த வேட்பாளர்களுக்கு எந்த வித சுய காரணமுமின்றி வாக்களித்தால் மட்டுமே நல்லாட்சி அமையும். அதை விட்டு விட்டு காசுக்காகவும் நகைக்காகவும் ஓட்டு போட துணிந்தால் வருடத்திற்கும் அவதி பட போவது நாம் தான்.