நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்!

0
97

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அடுத்தடுத்து இதே கோரிக்கையுடன் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று உத்தரவிட்டது. அதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை நீங்கியதால், தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிகுமார் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.