Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன் காரணமாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டுக்கு தடை விதிக்கக் கோரி அந்த கல்லூரி இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் மீதான விசாரணையில், கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அனைவரும் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்ல இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 15-ந் தேதி) ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வர விதிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லும் என்றும், எனவே இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை தொடரும் எனக் கூறி ஹிஜாப் தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த ஹிஜாப் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிடப்பட்டது. ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு இந்த வழக்கின் மீதான விசாரணையை மேற்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version