சகல பாவங்களையும் போக்கும் திருப்பதி தீர்த்தங்கள்!

0
191

திருப்பதி திருமலையில் அனேக தீர்த்தங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அவற்றில் சில தீர்த்தங்கள் தொடர்பாகவும், அதில் நீராடுவதின் பலனையும் பார்க்கலாம்.

சுவாமி புஷ்கரிணி: ஆதி வராக மூர்த்தி சன்னதிக்கு அருகில் இந்த தீர்த்தமிருக்கிறது இதை தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கிறார்கள் இங்கே சரஸ்வதி தேவி தவம் புரிந்ததாக தலபுராணம் கூறுகிறது. மிகவும் புனிதமடைந்த தீர்த்தம் இது என்று சொல்கிறார்கள்.

மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூரிய உதயத்திற்குப் பின் 6 நாழிகை வரையில் திருப்பதி மலையிலிருக்கின்ற அனைத்து தீர்த்தங்களும் இந்த தீர்த்தத்தில் கூடுவதாக சொல்லப்படுகிறது. ஆகவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை சேரலாம் என்று சொல்லப்படுகிறது.

குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளன்று சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன என்று சொல்லப்படுகிறது. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும், கொடுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் ராஜசூய யாகம் செய்த பலனை அடைவர் என்று சொல்லப்படுகிறது.

தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் புரிந்த இடத்திலிருப்பதால் இதற்கு தும்புரு தீர்த்தம் என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இதில் நீராடினால் பரமபதமுண்டு என தெரிவிக்கிறார்கள்.

ஆகாச கங்கை: நாள்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தால் வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது சகல பாபங்களையும் போக்கும் இந்த தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த காலத்திலேயே திருமலை நம்பிகள் நாள்தோறும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய கூடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே செல்வார்களாம்.

கோயிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம் எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கரியத்தை மெச்சும் விதமாக காட்சி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. சகல சித்திகளையும் வழங்கும் இந்த தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று நீராடுவது மிகவும் விசேஷம் என சொல்கிறார்கள்.

பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் கூடிய செவ்வாய்க்கிழமைகளில் பல தீர்த்தங்கள் இதில் இணையும் அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

பாபவிநாச தீர்த்தம்: இந்த தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்திருக்கிறது மிகவும் சுவையுடன் இருக்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் உத்திராட நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் இதில் சில தீர்த்தங்கள் ஒன்றிணைகின்றன.

அன்றைய தினத்தில் இந்த தீர்த்தத்தில் நீராடுவர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகிறார்கள் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.