வேட்புமனு தாக்கல் செய்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்!

0
93

சென்ற மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவித்தது. அதோடு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நாளையும் அதேபோல வேட்புமனு தாக்கல் முடிவுறும் நாளையும் அறிவித்தது .

அதன்படி சென்ற 12ஆம் தேதி தமிழகத்திலே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதோடு அன்றைய தினமே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிடிவி தினகரன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், என்று தமிழகத்தின் முக்கிய நபர்கள் அனைவரும் அன்றைய தினமே தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் வேட்புமனுத்தாக்கல் இல்லாத காரணத்தால், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வேட்புமனுத்தாக்கல் வேகமெடுக்க தொடங்கியது.வியாழக்கிழமையான நேற்று ஒரே நாளில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு அதிகமான வேட்பு மனு தாக்கல் நடந்திருக்கிறது. நேற்று மாலை வரையில் தமிழ்நாடு முழுக்க 3035 வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அவர்களில் 2509 பேர் ஆண்கள் மற்றும் 525 பேர் பெண்கள் அதோடு ஒரு திருநங்கை என்று வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மார்ச் மாதம் 19ஆம் நாளான இன்றோடு முடிவடைய இருக்கிறது. ஆகவே இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இன்றைய வேட்புமனுத்தாக்கல் இன்னும் வேகம் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதி மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.அதேபோல நாளை மார்ச் மாதம் 20ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று அடுத்ததாக வரும் 22ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.