Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

சென்னை சேத்துப்பட்டை சார்ந்த விசிக பிரமுகர் இளங்கோவன் மர்ம நபர்களால் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். 50 வயதான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107வது வட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இளங்கோவன் தனது நண்பன் ஜெயவேலுவுடன் சிட்டிபாபு தெருவில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்து அந்த ஆறு பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இளங்கோவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது‌. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இளங்கோவன் மற்றும் சஞ்சய் பிரபு ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சஞ்சய் பிரபு தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவனை வெட்டியது தெரியவந்துள்ளது.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் சேத்துப்பட்டு போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான ஆறு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version