முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்த யானை… மகிழ்ச்சியில் அருண் விஜய்

0
115

அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

 இதையடுத்து இப்போது தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் என்று புகழப்படும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான யானை படத்தில் நடித்துள்ளார். யானை படத்தில் பிரியா, பவானி, சங்கர், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் அம்மு ,அபிராமி ,யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல ரிலீஸ் தேதி அறிவிப்புகளும் தள்ளிவைப்புகளும் நடந்த பின்னர் தற்போது ஜூலை 1ஆம் தேதி படம் வெளியாகியுள்ளது.

இதுவரை அருண் விஜய் படத்துக்கு இல்லாத அளவுக்கு 1500 திரைகளில் யானை திரைப்படம் ரிலீஸானது. வெளியாகி முதல் வார இறுதியைக் கடந்துள்ள நிலையில் திருப்திகரமான வசூலைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விக்ரம் ரிலீஸுக்கு பிறகு எந்தவொரு தமிழ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யாத நிலையில் யானை திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை படத்துக்குப் பின்னர்  அருண்விஜய் நடிப்பில் பார்டர் ,அக்னிசிறகுகள், சினம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.