ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா!

0
121

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி. இதில் இரு நாடுகளுக்கிடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது.

அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்திய அணி 303 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்து 447 ரன்களை இலங்கை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 208 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.

இந்த நிலையில், அணியின் வெற்றி குறித்தும், வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்தும் ரோஹித் சர்மா கூறுகையில், இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதை நான் தனிப்பட்ட முறையிலும், அணியாகவும் அனுபவித்து வருகிறேன் என கூறினார். மேலும் போட்டியில் வீரர்களின் பங்களிப்பு குறித்து அவர் கூறுகையில்,

ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பீல்டிங், பௌலிங் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார். இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடியதை போன்று தனது டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர்.

ரிஷப் பண்ட் ஒவ்வொரு ஆட்டத்திலும் தனது திறமையை மேம்படுத்தி வருகிறார் எனக் கூறிய ரோஹித், “அஷ்வினை பொறுத்தவரை அவரிடம் எப்பொழுது பந்தை கொடுத்தாலும் அவர் சிறப்பாக வீசுகிறார் இவ்வாறு அவர் கூறினார்.