நமது உறவுகளில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அனைவரும் அழுகிறோம். அதுவே மிகவும் நெருங்கிய உறவாக இருந்தால் அவரை அனுதினமும் நினைத்து, மனம் வருந்தி அழுது கொண்டே இருப்போம். அது இயற்கையான ஒன்றுதான். ஆனால் நாம் இவ்வாறு அவரை நினைத்து அழுது கொண்டே இருப்பது, இறந்தவருக்கு ஆறுதலை தருமா? என்று கேட்டால் அது நிச்சயம் தராது என்றே கூற வேண்டும்.
ஏனென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்படுத்தும். நம்மை நினைத்து அனைவரும் அழுகிறார்களே என்ற மன வருத்தத்தை தான் அவர்களுக்கு கொடுக்குமே தவிர, ஆறுதலாக ஒருபோதும் இருக்காது.ஒருவர் இறந்தவுடன் அவரது சடலத்தை சுற்றி அனைவரும் அழுவோம். அந்த சமயத்தில் யாராலும் அழாமல் இருக்க முடியாது. எனவே அது இயற்கையான ஒன்றுதான்.
ஆனால் அவருக்காக செய்கின்ற ஒவ்வொரு சடங்குகளிலும் அவரை நினைத்து அழுவது நிச்சயம் அவருக்கு ஆறுதலாக இருக்காது. நாம் இல்லாமல் இருப்பது நமது குடும்பத்திற்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது, என்று நினைத்து அவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டு, ஆத்ம நிம்மதி இல்லாமல் தான் இருப்பார்கள்.
ஒருவர் இறந்து விட்டால் அவருக்கான ஆறுதல்களையும், மன நிம்மதியையும், ஆத்ம சாந்தியையும் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களை மன நிம்மதி இல்லாமல் இருக்க விடக்கூடாது. இறந்தவரை நினைத்து அழுது கொண்டே இல்லாமல் இருந்தால்தான், அவரது ஆத்மா சாந்தி அடைந்து அடுத்த பிறவிக்கு மனநிம்மதியுடன் செல்லும். இல்லை என்றால் அவரது ஆத்மா சாந்தி அடையாமல், மன நிம்மதியற்று இந்த உலகிலேயே தான் அலையும்.
இறந்தவருக்கு ஆத்ம சாந்தியை கொடுப்பதுதான் நாம் அவருக்கு செய்யக்கூடிய நன்றி கடன். நாம் இறந்தவரை நினைத்து அழுது கொண்டே இருக்கும் பொழுது, இறந்தவருக்கும் நம்மை விட்டுப் பிரிய மனம் இல்லாமல், ஆத்மா சாந்தி அடையாமல், மறுபிறவி எடுக்காமல் இந்த பிறவியிலேயே இருக்கும்.