உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்கள். அப்போது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு,
முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் மக்கள் பொது இடங்களுக்கு சகஜமாக சென்று வருகின்றனர். ஆனால் தற்போது இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது.
நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்து காணப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் தமிழகத்தில் பொது மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல, ஆனால் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வழியாகும். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை.
வீரியம் குறைவான கொரோனா தான் பரவி வருகின்றது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்வது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.