பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்!!

0
140
#image_title
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்!
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம் வர்மா வெளியிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுவை என இரண்டு மாநிலங்களை சேர்த்து 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதையடுத்து இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மொத்தமாக தேர்வு எழுதியவர்களில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.66 சதவீதமும் மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணக்கு பாடத்தில் 3649 பேரும், அறிவியல் பாடத்தில் 3584 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை.
தமிழ் பாடத்தில் 95.55 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 98.93 சதவீதம் பேரும், கணிதத்தில் 95.54 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 95.75 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 95.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்ற ஆண்டை விட 1.32 சதவீதம் தேர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்திலும் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்திலும் விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 3718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் 87.45 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.