போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார். நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வந்தது. ஆனால், விக்னேஷ் நடந்துகொண்டது அஜித்துக்கு பிடிக்காமல் போனதால் அந்த படத்திலிருந்து தூக்கப்பட்டார். விக்னேஷ் சிவன் போனதால்தான் மகிழ் திருமேனிக்கு அந்த வாய்ப்பு வந்தது.
அதன்பின் லவ் டுவே படத்தில் ஹீரோவாக நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.கே என்கிற படத்தை இயக்க துவங்கினார். இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார். 60 சதவீதம் படம் முடிந்தபோது சொன்ன பட்ஜெட்டை படம் தாண்டியதால் இனிமேல் இந்த படத்திற்கு என்னால் செலவு செய்ய முடியாது என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் ஒதுங்கினார்.
ஒருவழியாக அந்த பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. இப்போது ஒரு பாடல் காட்சிக்கு 5 கோடி வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்க லலித்குமார் ஆடிப்போய்விட்டாராம். என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது என சொல்ல மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தபட்டிருக்கிறது. இதற்கிடையில் கீர்த்தீஸ்வரன் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போய்விட்டார் பிரதீப்.