தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இப்போது இருவரும் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படம் நேற்று வெளியானது.
பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் கேத்ரின் தெரஷா, மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.
ஒரு கிராமத்தில் இருக்கும் பள்ளியில் வடிவேலு பி.டி ஆசிரியராக இருக்க அங்கு சுந்தர்.சியும் பி.டி.ஆசிரியராக வருகிறார். அந்த பள்ளியில் படித்த ஒரு சிறுமி காணாமல் போக ஆசிரியை புகார் கொடுக்க அதுபற்றிய விசாரணையும் துவங்குகிறது. அங்கு ரவுடிசம் செய்து கொண்டிருக்கும் குரூப்பை பார்த்து சுந்தர்.சி பொங்க என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
வில்லனிடம் இருக்கும் 150 கோடி பணத்தை வடிவேலு உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்க நினைக்கிறார் சுந்தர்.சி. இது தொடர்பாக நடக்கும் காமெடி கலாட்டாதான் கேங்கர்ஸ் படம். இந்நிலையில், இப்படம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சிம்பு ‘கேங்கர்ஸ் படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு சார் அவரின் மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்திவிட்டார். படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்’ என சொல்லியிருக்கிறார்.