வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார் என்கிறார்கள். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.
இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரெய்டை காரணமாக காட்டி மிரட்டை அதிமுகவை பாஜக அடிபணிய வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். அதோடு, பாஜகவுக்கு அடிபணிந்து அதிமுக மாநில சுயாட்சியை அடகு வைத்துவிட்டதாக பேசி வருகிறார்.
இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘குளத்தில் இலையின் மீது தாமரை மலரும். அதுபோலத்தான் ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். அப்படி மலரும்போதுதான் நாம் எல்லாம் இலைபோட்டு சரியாக சாப்பிட முடியும்’ என பேசியிருக்கிறார்.