தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. ஆங்கிலம் கற்கும் திறனில் தனியார் பள்ளிகளுடன் அரசு பள்ளி போட்டியிட முடியாத சூழல் இருப்பதன் காரணமாக பெற்றோர்கள் தனியார் பள்ளியை நாடி செல்கின்றனர்.
அரசு நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக லெவல் அப் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளில் ஆங்கில திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் ஆங்கிலம் பேசுதல் மற்றும் எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எளிதில் ஆங்கில மொழியில் உள்ள அடிப்படை திறன்களை பெரும் வகையில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏழு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு மாத வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜூன் மாதத்துக்கான இலக்கு பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதனை ஆசிரியர்கள் எளிதாக பார்க்கும் வகையில் தனி இணையதளம் துவங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு அலுவலர்கள் மீளாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.