தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் மாணவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 தேர்தலுக்காக தன் கட்சியை தயார்படுத்தி வரும் நிலையில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மாணவர்களை முதற்கட்டமாக சந்தித்தார்.
இந்நிலையில் ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை வரும் ஜூன் நான்காம் தேதி சந்தித்து பாராட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக இருக்கின்றது. இந்த ஆண்டு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முதற்கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட மாணவர்கள் சந்திப்பதற்கு விஜய் தயாராகியுள்ளார். தொகுதி வாரியாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பட்டியல் தயார் செய்து அனுப்பி வைத்தனர்.
இரண்டாம் கட்டமாக ராமநாதபுரம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி ,நெல்லை, திருப்பத்தூர், மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து பரிசு வழங்கி பாராட்ட இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் விஜய் நாள் முழுவதும் மேடையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் மாணவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து பேசுகின்றார். இது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.