தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து முடிந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. பள்ளி திறந்த முதல் நாளிலிருந்து மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் மாணவர்கள் அரசு அங்கீகரித்த சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும்.
அதில் இறுக்கமான முக்கால் அளவுள்ள பேண்ட் இறுக்கமான மற்றும் முழங்கை சட்டை உள்ளிட்டவற்றை அணிந்து வர அனுமதி கிடையாது. மேலும் மாணவர்கள் அதிகளவு முடி வைத்திருக்கக் கூடாது, கத்தி, கத்திரிக்கோல் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை பள்ளிக்கு மாணவர்கள் எடுத்து வர அனுமதி கிடையாது. வண்ண கயிறுகள், ஜாதி அடையாளம் குறிக்கும் பனியன் அணிவது, அடையாள ஸ்டிக்கர் ஒட்டிய சைக்கிள் எடுத்து வருவது உள்ளிட்டவற்றைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் பல வண்ணங்களில் ரிப்பன் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு வரும் பொழுது தூய்மையான சீருடை அணிந்து காலணி அணிந்து வருவது அவசியம். மாணவர்களுக்கு விடுமுறை தேவைப்பட்டால் அவர்களுடைய பெற்றோர் மூலம் ஆசிரியரிடம் தெரிவித்த பிறகே விடுமுறை எடுக்க வேண்டும். இல்லையெனில் மறுநாள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.