PMK ADMK: பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்து கொண்டே செல்கிறது. ராமதாஸ் அன்புமணியை கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கியபோது தலைவர் பதவியில் ராமதாசின் மகள் காந்திமதி அமர்த்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வதாக கூறியிருந்தது. தற்போது பாமக இரண்டாக பிளவு பட்டதால் பாமக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. தற்போது இபிஎஸ் அன்புமணியிடமும், ஸ்டாலின் தரப்பு ராமதாசிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வந்துள்ளது.
பாமகவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக தேர்தலில் கோட்டை விட கூடாது என்பதில் அன்புமணி தெளிவாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அன்புமணி இபிஎஸ்-யிடம் 38 சட்டமன்ற தொகுதிகளையும் 1 ராஜ்ய சபா சீட்யையும் கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பல நாட்களாக அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்திய இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தனது தேர்தல் பரப்புரையில் அதிமுகவில் ஒரு பெரிய கட்சி இணைய இருக்கிறது என்றும், இதனால் கூட்டணி இன்னும் பலமடையும் என்றும் பலமுறை கூறியிருக்கிறார். இவர் இவ்வாறு கூறியது பாமகவை தான் என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.